Friday, September 27, 2019

பாரதியும்..சிட்டுக்குருவியும் - 15

(சிட்டுக்குருவியினைப் பார்ப்பதில் பாரதிக்கு பரம ஆனந்தம்.சில சமயங்களில் அவற்றைப் பார்த்து பொறாமையும் பட்டிருக்கிறாராம்.இதோ..அவரே சொல்வதைப் படிப்போம்)

சிறிய தானியம் போன்ற மூக்கு..
சின்னக் கண்கள்..
சின்னத் தலை..
வெள்ளைக் கழுத்து..
அழகிய மங்கல்-வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு
கருமையும்,வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய  பட்டுப் போர்த்த முதுகு
சிறிய தோகை
துளித் துளிக் கால்கள்

இவ்வளவும் சேர்ந்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம்.

இவ்விதமான உடலைச் சுமந்துக் கொண்டு என் விட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன.அவற்றில் ஒன்று ஆண்.மற்றொன்று பெண்.இவை தமக்குள்ளே பேசிக் கொள்கின்றன.குடும்பத்துக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்கின்றன.கூடு கட்டிக் கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டை இட்டுக் குஞ்சுகளை பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.

சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமை உண்டாகும்,ஆஹா..உடம்பை எவ்வளவு லாவகத்துடன் சுமந்து செல்கின்றன.இந்தக் குருவிக்கு எப்போதேனுலும் தலைநோவு வருவதுண்டா? எனக்குத் தோன்றவில்லை.ஒருமுறையேனும் தலைநோவு வந்திருந்தால், முகத்தில் இவ்வளவு தெளிவு இருக்க நியாயமில்லை.

பயமும்,மானமும் மனிதனுக்குள்ளது போலவே குருவிகளுக்கும் உண்டு.இருந்த போதிலும் ..எப்போதும் மனிதருடைய நெஞ்சை செல்லரிப்பது போல அரிக்கும் கவலைத் தொகுதியும்,அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா?பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும்..அதன் கட்டுகளையும்,நோய்களையும்,துன்பங்களையும்,பொய்களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இச்சைப்படி வானத்தில் பறந்து செல்லமாட்டேனா?

ஆஹா..எத்தனை தேசங்களைப் பார்க்கலாம்.எத்தனை நாடுகள்..எத்தனைப் பூக்கள், எத்தனை மலைகள், எத்தனை சுனைகள்,எத்தனை அருவிகள்,எத்தனை நதிகள்,எத்தனை கடல்வெளிகள்! வெயில், மழை,காற்று,பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உண்ர்ச்சிகளே உண்டாகும் இந்த நிலை எனக்கு அருள் புரியலாகாதா?

குருவிக்கு பேசத் தெரியும்.பொய் சொல்லத் தெரியாது.குருவியில் ஆண்,பெண் உண்டு.தீராத கொடுமைகள் இல்லை.குருவிக்கு வீடுண்டு.தீர்வை கிடையாது.நாயகனில்லை..சேவகமில்லை..

தெய்வமே! எனக்கு இவ்விதமான வாழ்க்கை தரலாகாதா?

குருவிக்கில்லாத பெருமைகள் எனக்கும் சிறிது அருள் செய்திருக்கிறாய் என்பது மெய்தான்..ஆராய்ச்சி,பக்தி,சங்கீதம்,கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கைகூடும்.குருவிக்கு இயல்பில்லை.ஆனாலும்..இந்த இரண்டுவித இயல்பும் கலந்து பெற்றால் நான் பரிபூரண இன்பத்தை அடையமாட்டேனா?

இந்தக் குருவி என்ன சொல்கிறது..

விடு விடு விடு என்று கத்துகிறது.இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி என்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போலிருக்கிறது .

விடு விடு விடு! தொழிலைக் கைவிடாதே!உணவை விடாதே!பேட்டை விடாதே..கூட்டை விடாதே..குஞ்சை விடாதே..உள்ளக்கட்டை அவிழ்த்து விடு.வீண் யோசனையை விடு.துன்பத்தை விடு.

இந்த விடு சொல்வதற்கு எளிதாயிருக்கிறது.இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று.உணர்ந்த பின்னும் இவை வழக்கப்படுத்துதல் அருமையிலும் அருமை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home