Saturday, October 5, 2019

பாரதியாரும் சயன்ஸும் - 17

(சயன்ஸ் என்று சொல்லப்படும் பௌதிக சாஸ்திரத்திலும் பாரதியார் திறமையுடையவர்.அவர் மாணவர்களுக்கு எவ்விதம் பயில வைக்க வேண்டும் என எண்ணுகிறார் என்பதைக் காண்போம்)

சயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும்,பரீட்சைகள் மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க வேண்டும்.பிள்ளைகளுக்கு அவர்களே பரிசோதனைக் கூடங்களில் சோதனைகள் செய்து பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

வியாபார விஷயங்களுக்கு ரசாயன சாஸ்திரம் மிகவும் பிரயத்னமாகையால் ரசாயன பயிற்சியிலேயே அதிக சிரத்தைக் காண்பிக்க வேண்டும்.

கண்களுக்குத் தெரியாத நுட்பமான பூச்சிகள் தண்ணீர் மூலமாகவும்,காற்று மூலமாகவும்,மண் மூலமாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன எண்ற விஷயம் சயன்ஸ் மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதில் சிறிது உண்மையிருந்தாலும், மனம் சந்தோஷமாகவும்,ரத்தம் சுத்தமாகவும் இருப்பவனை அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்ய மாட்டா என்பதை ஐரோப்பப் பாடசாலைகளில் அழுத்திச் சொல்லவில்லை.அதனால் சயன்ஸை நம்புவோர் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாய் இராமல் தீராத நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்.ஆதலால்,நமது ஆரம்ப பாடசாலையில் மேற்படி பூச்சிகளைப் பற்றிய பயம் மாணாக்கருக்குச் சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும்.

உலகம் காற்றாலும்,மண்ணாலும்,நீராலுமே சமைந்திருக்கிறது.இவற்றை விட்டு விலகி யாராலும் வாழ இயலாது.இந்த மூன்றின் வழியாகவும் எந்த  நேரமும் ஒருவனுக்குப் பயங்கரமான நோய்கள் வந்துவிடக் கூடும் என்ற மூட நம்பிக்கையை ஆசிரியர்கள் இளஞ் சிறுவர்கள் மத்தியில் பதியும்படி செய்து விட்டார்கள்

சிறு வயதில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன.அசைக்க முடியாதன..மறக்க முடியாதன..ஆகவேதான் நமது நாட்டிலும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும் பயத்துக்கு ஆளாகித் தீராத கவலை கொண்டு மடிகிறார்கள்.

பூச்சிகளால் மனிதர்கள் சாவதில்லை...நோய்களாலும் சாவதில்லை.கவலையாலும், பயத்தாலுமே சாகிறார்கள்.இந்த உண்மை நமது தேசியய் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய வேண்டும்.

சயன்ஸ் பாடங்களை கற்றுக் கொடுப்பதில் மிகவும் தெளிவான எளிதான தமிழ்நடையில் பிள்ளைகளுக்கு மிகவும் சுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப்பெயர்களையே  உபயோகப்படுத்த வேண்டும்.

ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன் போன்றவற்றிற்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும், பிராணவாயு, ஜலவாயு போன்ற பெயர்களையே வழங்க வேண்டும்.தமிழ்ச் சொற்கள் அகப்படவே இல்லையெனில் சமஸ்கிருத பதங்களை வழங்கலாம்..இந்த இரண்டு மொழிகளிலும் சொற்கள்  அகப்படவில்லையென்றால்தான் ஆங்கிலப் பதங்களை உபயோகப்படுத்தலாம்.

ஆனால்..அவற்றின் குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்கு ஆங்கிலப் பதங்களை ஒரு போதும் வழங்கக் கூடாது.

ரசாயனம் பற்றி கற்பிக்கும் போது...

1) உலகத்தில் காணப்படும் வஸ்த்துகள் எல்லாம் எழுபது சொச்சம் மூலப் பொருள்களாலும்,அவற்றின் பலவகைப்பட்ட சேர்க்கைகளாலும் சமைந்து இருக்கின்றன. (சோதனைகள் செய்து காட்ட வேண்டும்)

2)அந்த மூலங்களில் பொன், வெள்ளி,செம்பு,கந்தகம் போல வழக்கில் உள்ள பொருள்கள் இவை.குரோமியம்,டைடானியம்,யுரேனியம் போல சாதாரண வழக்கில் இல்லாதன இவை.கன ரூபமுடையன இவை.வாயு ரூபமுடையன இவை..என முக்கியமான மூல பதார்த்தங்களின் குணங்கள் முதலியவற்றை எடுத்து காட்ட வேண்டும்.

3) ரசாயன சேர்க்கை,பிரிவு இவற்றின் இயல்புகள், விதிகள்(பரிசோதனைகள் மூலமாக விளக்கலாம்))

4)ரேடியம், ஹெலியம் முதலிய புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மூல பதார்த்தங்களின் அற்புத குணங்கள்

5)பரமாணுக்கள்,அணுக்கள்,அணுக்கணங்கள் இவற்றின் இயல்பு, குணங்கள், செய்கைகள் முதலியன

இவை போன்ற பொது அம்சங்களைப் பற்றிய முக்கியமான செய்திகளை, சாதாரண பேச்சு நடையில், ஆசிரியர்கள் வீட்டில் எழுதிக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டி அவர்களை எழுதி வைத்துக்கொள்ளுமாறு செய்ய வேண்டும்

இயற்கை நூல் (physics),ரசாயனம் (chemistry), சரீர சாஸ்திரம்,ஜந்து சாஸ்திரம்,செடி நூல் (botany and zoology)இவையே முக்கியமாகப் போதிக்க வேண்டியவை.

பாரதியின் விஞ்ஞான அறிவு நம்மை வியகக் வைக்கின்றது.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home