Wednesday, June 4, 2008

பெண் விடுதலை

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் முக்கியமான ஆரம்ப படிகள் என பாரதியார் எதை எதைச் சொல்கிறார்.
1. பெண்கள் ருதுவாகுமுன் விவாகம் செய்யக்கூடாது.
2.அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3.விவாகம் செய்துக்கொண்டப் பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும்.அதன் பொருட்டு
அவளை அவமானப் படுத்தக்கூடாது.
4.பிதுராஜ்யத்தில் அவர்களுக்கு சம பாகம் கொடுக்க வேண்டும்.
5.புருஷன் இறந்த பிறகு அவள் மறு விவாஹம் செய்வதை தடுக்கக்கூடாது.
6.விவாஹமே இல்லாமல்,தனியாக இருந்து வியாபாரம்,கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும்
ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
7.பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷனுடன் பேசக்கூடாதென்றும்,பழகக்கூடாதென்றும் பயத்தாலும்,பொறாமையாலுமேற்படுத்தப் பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.
8.பெண்களுக்கும், ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
9.தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.
10.தமிழ்நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே..அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை.எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால்..அப்போது
பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.சென்ற வருஷத்தில் காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மிஸஸ்.ஆனிபெசண்ட் என்ற ஆங்கில ஸ்திரீ என்பதை மறந்து போகக்கூடாது.
இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்ப படிகள் காட்டினோமானால்..பிறகு அவர்கள் தங்கள் முயற்சியிலே பரிபூர்ண
விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள்.அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீக ரிஷிபத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்த்ரீகள் வர இடம் உண்டாகும்.ஸ்த்ரீகளை மிருகங்களாக வைத்து நாம்
மாத்திரம் மகரிஷிகளாக முயலுதல் மூடத்தனம்.
பெண் உயராவிட்டால்...ஆண் உயரமுடியாது.