Monday, February 25, 2008

நல்லதோர் வீணை

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது



நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?

சொல்லடி சிவசக்தி -எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் .

வல்லமை தாராயோ -இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி -நிலச்

சுமையென வாழ்ந்திடப்புரிகுவையோ ?

விசையுறு பந்தினைப்போல -உள்ளம்

வேண்டிய படி செலும் உடல்கேட்டேன் !

நசையறு மன ங் கேட்டேன் -நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் !

தசையினைத் தீச்சுடினும் -சிவ

சக்தியை ப்பாடும் நல் அகங்கேட்டேன் !

அசைவறு மதிகேட்டேன் -இவை

அருள்வதில் உனக்கேதுந்த் தடையுளதோ ?

Sunday, February 24, 2008

பெண் விடுதலை

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் முக்கியமான ஆரம்பப்படிகள்
என்ன என பாரதியாருடைய கருத்துக்களை பார்ப்போம் .
பெண்கள் ருதுவாகுமுன்பு திருமணம் செய்து கொடுக்கக்கூடாது.
அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துகொள்ளும்படி
வற்புறுத்தல் கூடாது.
விவாகம் செய்துகொண்டபிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்கவேண்டும் .அதன் பொருட்டு அவளை அவமானப் படுத்தக்கூடாது.
பிதுராஜ்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்கு சமபாகம் கொடுக்கவேண்டும்
புருஷன் இறந்தபிறகு ஸ்திரீ மறுபடி விவாகம் செய்வதை த்தடுக்ககூடாது.
விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம் ,கைத்தொழில் முதலியவற்றால் கவுரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சியான
தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்கவேண்டும் .
பெண்கள் கணவனைத்தவிர வேறுபுருஷருடன் பேசக்கூடாதென்று,
பயத்தாலும் ,பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.
பெண்களுக்கும் ஆண்களைப்போலவே உயர்தரக்கல்வியின் எல்லா கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்தவேண்டும் .
தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும்
அதை சட்டம் தடுக்கக்கூடாது .
தமிழ் நாட்டில் ஆண் மக்களுக்கே சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை .எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். சென்ற வருஷத்தில் காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் .அன்னிபெசன்ட் ஸ்திரீ என்பதை மறந்து பேசக்கூடாது .
இவ்வாறு நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டிநோமானால் பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியை காப்பாற்றுவார்கள் .அப்போதுதான் நமதுதேசத்து பூர்வீக ரிஷிபத்னிகள்
இருந்த ஸ்திதி நமது ஸ்த்ரீகள் வர இடம் உண்டாகும்.
பெண் உயராவிட்டால் ஆண் உயரமுடியாது. .

Saturday, February 23, 2008

தமிழ் மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வன்மொழி வாழிய வே
ஏழ் கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே
எங்கள் தமிழ்மொழி ! எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி !
வாழ்க தமிழ்மொழியே !
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே